ஓடும் பேருந்தில் பெண் நடத்துனர் உதவியுடன் கர்ப்பிணிக்கு பிரசவம்

கர்நாடகா: ஓடும் பேருந்தில் கர்ப்பிணிக்கு பிரசவம்... கர்நாடகாவில் ஓடும் பேருந்தில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, கர்ப்பிணி பெண் ஒருவர், பெண் நடத்துனரின் உதவியுடன் பேருந்திலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

பெங்களூர்-சிக்மகளூர் வழித்தடத்தில் பயணித்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, பயணிகளை கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்ட நடத்துனர் வசந்தம், அந்த பெண் பேருந்திலேயே குழந்தையைப் பெற்றெடுக்க உதவி செய்தார்.

மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த அப்பெண்ணுக்கு அவசர செலவிற்காக பேருந்து பயணிகள் ஆயிரத்து 500 ரூபாய் வசூலித்துக் கொடுத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் தாயும், சேயும் ஷாந்தாகிராம மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

சரியான நேரத்தில் உதவிய பெண் நடத்துனருக்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தரப்பிலும் பெண் நடத்துனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.