பாரிமுனையில் மிகவும் பழமையான அடுக்குமாடி கட்டிடம் இடிந்தது

சென்னை: பழமையான அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது... சென்னை பாரிமுனையில் சுமார் 70 ஆண்டுகள் பழமையான நான்கு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது.

அர்மேனியன் தெருவில் உள்ள இக்கட்டிடத்தை ராயல் ஸ்டீல்ஸ் என்ற நிறுவன உரிமையாளர் வாங்கிய நிலையில், அதனை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது பலத்த சத்தத்துடன் கட்டிடம் திடீரென இடிந்து தரைமட்டமானது. இதில், அருகாமையில் இருந்த வீடுகள், கடைகள் என 5க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

5க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், நவீன உபகரணங்களுடன் தீயணைப்புத்துறையினரும் போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பேசிய துணை மேயர், பழமையான இக்கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிக்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்தார்.