காரை விடாமல் துரத்திய காட்டு யானையால் பரபரப்பு

சத்தியமங்கலம்: காரை விடாமல் துரத்திய காட்டு யானை... சத்தியமங்கலம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் காட்டு யானை மின்னல் வேகத்தில் வாகனத்தை துரத்தி தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இந்நிலையில், ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் நடமாடுகின்றன. இதையடுத்து நேற்று மாலை சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்வதற்காக ஒரு காரில் நான்குக்கும் மேற்பட்ட பயணிகள் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தமிழக கர்நாடக எல்லையில் உள்ள புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக கார் சென்று கொண்டிருந்தபோது சாலையோர வனப்பகுதியில் ஒரு காட்டு யானை நிற்பதை கண்டனர். இந்நிலையில், வனப்பகுதியில் இருந்த காட்டு யானை திடீரென ஆத்திரத்துடன் வேகமாக சாலைக்கு ஓடி வந்தது. இதைக்கண்ட காரில் சென்றவர்கள் உடனே காரை நிறுத்தினர்.

அப்போது காட்டு யானை காரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. யானை துரத்திக் கொண்டு வருவதை அறிந்த காரில் இருந்தவர்கள் காரை பின்னோக்கி வேகமாக இயக்கி உயிர் தப்பினர். சுமார் 100 மீட்டர் தூரம் காட்டு யானை வேகமாக காரை துரத்தியதால் காரில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் நடமாடும் காட்டு யானைகள் அவ்வப்போது வாகனங்களை துரத்தி தாக்க முற்படுவதால் வாகன ஓட்டிகள் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் அருகே வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும், வனவிலங்குகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.