சூரியரில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வாலிபர் பலி

திருச்சி: திருச்சி அடுத்த சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மதுரையை சுற்றியுள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி உலக பிரசித்தி பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை பார்க்க பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் மதுரையை நோக்கி பொங்கல் சமயத்தில் படையெடுப்பார்கள் என்பதாவ், ஊரே களைக்கட்டி காட்சியளிக்கும்.

அந்த வகையில் பாலமேட்டில் மாட்டு பொங்கலான நேற்று ஜல்லிக்கட்டு போட்டி, காவல் துறையினரன் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. மதுரையை போன்றே திருச்சி அடுத்த சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.

700க்கும் அதிகமான காளைகள் போட்டிக்கு வந்துள்ளன. 400 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மதியம் நிலவரம் வரை 350 காளைகள் களம் கண்ட நிலையில், காளைகள் முட்டி தள்ளியதில் வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 33 பேர் காயமடைந்தனர். இவர்களில் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில் அரவிந்த்(25) என்ற வாலிபரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. பார்வையாளராக வந்த இவர், புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரை சேர்ந்தவர். காளைகள் மைதானத்தில் இருந்து வெளியே ஓடிவரும் பகுதியில் இவர் நின்றிருந்தபோது வேகமாக வந்த காளை இவரது மார்பிலேயே முட்டி தள்ளியது.

இதில் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்த அரவிந்த்துக்கு டாக்டர்கள் முதலுதவி அளித்தனர். உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே பாலமேட்டில் அரவிந்த் ராஜன் என்ற மாடு பிடி வீரர் உயிரிழந்த நிலையில், சூரியரில் பார்வையாளர் அரவிந்த் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.