தஞ்சை அருகே இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் பரிதாப பலி

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகே சூழியக்கோட்டை கம்பர்நத்தம் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.

தஞ்சை கரந்தை கல்லுக்காரத் தெருவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (35). இவர் தஞ்சையில் உள்ள பாத்திரக்கடையில் பணியாற்றி வந்தார். கடந்த 3ம் தேதி இரவு இவர் கடையில் பொருட்கள் வாங்கியவர்களிடம் பணம் வசூலிப்பதற்காக சாலியமங்கலம் அருகே ஆழிக்கோட்டை கம்பர் நத்தம் சாலையில் பக்கிரிசாமி கொல்லை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே பச்சக்கோட்டை சாலைத் தெரு, சாமியய்யா மகன் வினோத் பாபு என்பவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து ஹரிகிருஷ்ணன் வாகனத்தில் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஹரிகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் காலை ஹரிகிருஷ்ணன் இறந்து விட்டார்.

இதுகுறித்து ஹரிகிருஷ்ணனின் சகோதரர் சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.