ஆம் ஆத்மி எம்.பி., வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையால் சர்ச்சை

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ஆக இருப்பவர் சஞ்சய் சிங். 2021-22ம் ஆண்டிற்கான டெல்லி அரசாங்கத்தின் கலால் கொள்கை மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க அனுமதித்ததாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சில டீலர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கடுமையாக மறுத்தது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு டெல்லி கவர்னர் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர். மேலும் அவரது வேலையாட்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

சோதனையின்போது ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா கூறுகையில், பாராளுமன்றத்தில் அதானி குழுமம் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பியதால், அமலாக்கத்துறை எங்களது ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங்கை குறிவைத்துள்ளது. இதனால் அவரது வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.