தனியார் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டதால் சிறைபிடிப்பு

சேலம்: பேருந்து சிறைப்பிடிப்பு... சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த தனியார் பேருந்தில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை நான் ஸ்டாப் என கூறி நடத்துனர் பாதி வழியில் இறக்கி விட்டதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் பேருந்தை சிறைபிடித்தனர்.

சேலத்திற்கு கபடி போட்டிக்காக சென்ற பாளையம்புதூர் இளைஞர்கள் பின்னர் தனியார் பேருந்து மூலம் ஊர் திரும்பியுள்ளனர். பாளையம்புதூருக்கு டிக்கெட் எடுத்த அவர்களை 3 கிலோ மீட்டருக்கு முன்பாகவே பாளையம் சுங்கசாவடி பகுதி அருகே இது நான் ஸ்டாப் பேருந்து என்று கூறி இறக்கி விட்டுள்ளார்.

இது பற்றி மாணவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் இணைந்து அந்த தனியார் பேருந்தை சிறை பிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது