மக்களுக்கு சேவைகளை புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்க நடவடிக்கை

கல்வி அமைச்சர் தகவல்... மக்களுக்கு சேவைகளை மேற்கொள்ளவே ஆணை வழங்கப்பட்டது என்றும் ஆகவே அவர்களுக்காகவே புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக ஆராய பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு, எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “மக்கள் ஆணையின் கீழ் நியமிக்கப்படும் ஜனாதிபதியொருவருக்கு வேலை செய்யக்கூடிய அளவில், அதிகாரங்கள் இருக்க வேண்டும்.

வேலை செய்யத் தான் மக்கள் அதிகாரத்தை வழங்கினார்கள். எனவே, வேலை செய்வதற்கு தடையாக உள்ள சரத்துக்களை நீக்க வேண்டியதுதான் எமது பிரதான கடமையாக இருக்கிறது.

இதற்காகத் தான் புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பாதுகாப்பு அமைச்சராக பதவிவகிக்க முடியுமா- இல்லையா என்பது குறித்து நீதிமன்றில் வழங்கொன்றைத் தொடந்து, 2-3 மாதங்களுக்கு வழக்காடினால், எவ்வாறு நாட்டை நிர்வகிப்பது? ஜனாதிபதி ஒருவருக்கு இதற்கான பொறுப்பு உள்ளது. இது ஜனாதிபதியை மட்டுமன்றி, ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பாதிக்கும்.

நாம் தற்போது 20 தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம். புதன்கிழமை இதுதொடர்பாக அமைச்சரவைக்கு தெரியப்படுத்துவோம்.” என கூறினார்.