தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய விழாவில் பங்கேற்க நடவடிக்கை

கோயில் விழாவில் பங்கேற்க நடவடிக்கை... வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வழிபாடுகளில் அடியவர்கள் கலந்துகொள்வதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஒன்று கூடுகின்ற நிழ்வுகள் சுகாதாரத் துறையினரால் மட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நாடளாவிய ரீதியில் குறித்த கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் சந்நிதி ஆலய உற்சவகால செயற்பாடுகளுக்கும் பொது சுகாதாரத் துறையினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 350 அடியவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், அடியவர்கள் எதிர்கொள்ளக் கூடிய அசௌகரியங்கள் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய அமைச்சர், பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடினார்.

இதன்மூலம், சமூக இடைவெளிகளையும் சுகாதார நடைமுறைகளையும் பேணி, செலவச் சந்நிதி ஆலயத்தின் உற்சவகால வழிபாடுகளில் அடியவர்கள் கலந்துகொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.