நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் - பியூஷ் கோயல் அறிவிப்பு

இந்தியா முழுவது 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஜூன் 1-ம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத 200 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான இணையதள டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்கள் பலர் இணையதளம் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்தனர். இதனால் விறுவிறுவென டிக்கெட்டுகள் காலியாகின.

இந்நிலையில், நாடு இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

வரும் நாட்களில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும். நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது. மே 22 முதல் நாடு முழுவதும் சுமார் 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு மீண்டும் தொடங்கும். அடுத்த 2-3 நாட்களில் வெவ்வேறு ரெயில் நிலையங்களின் கவுண்டர்களிலும் முன்பதிவு மீண்டும் தொடங்கும்.

ரெயில் நிலையங்களில் கடைகளை திறக்கவும் விரைவில் அனுமதி அளிக்கப்படும். உணவுப்பொருட்களை பார்சலாக மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். இன்று முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 4 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.