அதிமுக அரசியல் வட்டாரத்தில் பராபரப்பு; ஓ பன்னீர் செல்வத்துடன் மீண்டும் ஆலோசனை

அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பான விவாதங்கள், கடந்த சில நாட்களாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் வெளியிட்ட மாறுபட்ட கருத்து அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில், இன்று சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன், சிவி சண்முகம், உள்ளிட்ட 10 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பிறகு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இல்லத்திற்கு சென்ற மூத்த அமைச்சர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு, முதல்வர் பழனிசாமியை சந்தித்த மூத்த அமைச்சர்கள், அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். முதல் அமைச்சர் பழனிசாமியுடன் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள் சிலர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். அமைச்சர்கள், பத்திரிகையாளர்களை சந்திக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், பத்திரிகையாளர்கள் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை.

முதல்வருடன் ஆலோசனை நடத்திய நிலையில், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஆகியோர் மீண்டும் துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த ஆலோசனையால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.