அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு வேறு ஒரு அமர்வுக்கு மாற்றல்?

டெல்லி: அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட திருத்தப்பட்ட அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு மற்றொரு அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதி பார்வைக்கு அனுப்பப்பட்டது.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட திருத்தப்பட்ட அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பிரதீபா சிங் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கை விசாரிக்க ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதே சமயம், கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வகையில் மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் நிலுவையில் உள்ளதால், ஒரு வாரம் அவகாசம் தேவை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணையின்போது மனுதாரர் ஒருவருக்கு ஆதரவாக தனது கணவரும், வழக்கறிஞருமான மணீந்தர் சிங் ஆஜராகியுள்ளதால் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி பிரதிபா சிங் கூறினார். மேலும் மற்றொரு அமர்வு விசாரிக்கும் வகையில் தலைமை நீதிபதி பார்வைக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.