அதிமுக கண்ணாடி அல்ல சமுத்திரம்... அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

சென்னை: அதிமுக கண்ணாடி அல்ல, சமுத்திரம். அந்த சமுத்திரம் கல் வீசினால் காணாமல் போய்விடும். அதிமுகவில் தானாக வந்து இணைகிறார்கள், நாங்கள் யாரையும் இழுக்கவில்லை என அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதிமுக – பாஜக கூட்டணியில் மோதல் வெடித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கண்ணாடி அல்ல, சமுத்திரம். அந்த சமுத்திரம் கல் வீசினால் காணாமல் போய்விடும்.

அதிமுகவில் தானாக வந்து இணைகிறார்கள், நாங்கள் யாரையும் இழுக்கவில்லை என அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார்.

அசுர வேகத்தில் அதிமுக வளர்வதால் பிற கட்சியினர் தானாக முன்வந்து கட்சியில் இணைகின்றனர். கட்சியில் இணைவதை காழ்புணர்ச்சியோடு அணுகக்கூடாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்று இனி ஒரு தலைவர் பிறக்க முடியாது.

பாஜக தலைவர்கள் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும். ஜெயலலிதா போன்ற தலைவருடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டு பேசக்கூடாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பக்குவத்தோடு ஏற்கவேண்டும் என்றார்