ஏர் சீனா விமான என்ஜினில் தீப்பிடித்ததால் பரபரப்பு

சிங்கப்பூர்: சீன விமானத்தில் தீ... சிங்கப்பூர் விமானநிலையத்தில் ஏர் சீனா விமான என்ஜினில் தீப்பிடித்தது. பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீனாவின் செங்டு என்ற நகரத்தில் இருந்து CA403 என்ற விமானம் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதையடுத்து அந்த விமானம் சிங்கப்பூர் விமானநிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

கடும் புகை மூட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அவசரகால பாதை வழியாக இறக்கி விடப்பட்டனர். அவசரத் தரையிறக்கம் மற்றும் விமானத்தில் இருந்து இறங்கும்போது 7 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 149 பயணிகளும் 9 பணியாளர்களும் இருந்ததாக சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.