உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் ... மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்த சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மக்கள், குழந்தைகளுக்கிடையில் டென்னீஸ், கூடை பந்து, கைப்பந்து ஆகியவற்றை விளையாடி மகிழ்ந்தார்.

குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை அடுத்து அதன்பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம். மேலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

மேலும் சாப்பிடும் போது பசியோடு அமர வேண்டும், சாப்பிட்ட பின்பு பசியோடு எழுந்துகொள்ள வேண்டும். உடல்நலத்தை பேணிப் பாதுகாத்தால் கவலைகள், மன சங்கடங்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிவிடும்.

இதையடுத்து எனக்கு கொரோனா வந்தபோது மிக பெரிதாக பாதிப்பு வராமல் போனதற்கு உடற்பயிற்சியே முக்கிய காரணம். எனக்கு வயது 70 ஆகிறது. ஆனாலும் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன், தம்பிபோல இருப்போம் என்று அவர் கூறினார்.