ஆம்புலன்ஸ் டிரைவர் கொரோனா பாதித்து பலி; மக்கள் சோகம்

கண்ணீரை வரவழைத்த சோகம்... கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 200க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை இறுதிச் சடங்கு செய்வதற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு சேவை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர், கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அரசு வழிகாட்டுதல்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கவும், இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்யவும் ஆம்புலன்ஸ் தான் பயன்படுகிறது.

இதனால், ஆம்புலன்ஸ் டிரைவராக பணிப்புரிபவர்களுக்கு கொரோனா எளிதில் தொற்றிவிடுகிறது. இதன் காரணமாக சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உயிரிழக்கவும் செய்துள்ளனர். அந்த வகையில், 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் உடல்களை எடுத்துச் சென்று சேவையாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் இறுதியில் கொரோனாவால் பலியான பரிதாபம் டில்லியில் நடந்துள்ளது.

அங்கு இலவசமாக அவசரகால சேவைகளை வழங்கும் ஷஹீத் பகத் சிங் சேவா தளம் என்ற அமைப்பில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்தவர் ஆரிப் கான். 48 வயதான இவர், வீட்டில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால், கடந்த 6 மாதங்களாக வீட்டிற்கே செல்லாமல் ஆம்புலன்சிலேயே தங்கியுள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நோயாளிகளின் உடல்களை இறுதிச் சடங்கு செய்வதற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். இறுதிச் சடங்கு செய்ய பணம் இல்லாதவர்களுக்கு பண உதவியும், உற்றார் இல்லாத உடல்களுக்கு அவரே இறுதிச்சடங்கும் செய்து வந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 200க்கும் மேற்பட்ட உடல்களை எடுத்துச் சென்று சேவையாற்றிய அவருக்கு கடந்த அக்டோபர் 3ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.