அமெரிக்க மக்கள் 100 நாட்கள் முக கவசம் அணிய வேண்டும் - ஜோ பைடன்

அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அந்த நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
அமெரிக்காவில் கொரோனாவின் முதல் அலையை விட 2-வது அலை மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கடந்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி அமெரிக்காவில் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள ஜோ பைடன் அதற்கான பணிகளை இப்போதிலிருந்தே தொடங்கியுள்ளார்.

முக கவசம் அணிவதன் மூலம் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என ஜோ பைடன் நம்புகிறார். இந்நிலையில் தான் ஜனாதிபதியாக பதவி ஏற்றதும், தனது பதவி காலத்தில் முதல் 100 நாட்கள் மக்கள் முக கவசம் அணிய வலியுறுத்துவேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பதவியேற்கும் முதல் நாளில், அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று கேட்பேன். வாழ்நாள் முழுவதும் அல்ல என்றார்.

அமெரிக்காவை பொறுத்தவரையில் ஒரு புதிய ஜனாதிபதி பதவியின் முதல் 100 நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒரு ஜனாதிபதி எவ்வாறு சிறப்பாக வேலை செய்கிறார் என்பதற்கான அளவீடாக இது கருதப்படுகிறது. ஒவ்வொரு அமெரிக்கரும் முக கவசம் அணிந்தால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறையும் என நம்பும் ஜோ பைடன் அனைத்து அரசு அலுவலகங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.