டெல்லி புறப்படுவதற்கு முன்பாக அமைச்சர் அன்பழகனை சந்தித்த அமித்ஷா

டெல்லிக்கு புறப்படுவதற்கு முன்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை சந்தித்து பேசினார் மத்திய அமைச்சர் அமித்ஷா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று பிற்பகல் வந்தாா். அவரை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் உள்ளிட்டோா் வரவேற்றனா். பின் லீலா பேலஸ் நட்சத்திர விடுதிக்கு சென்ற அமித் ஷா சிறிது நேரம் கழித்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு முதல்வர், துணை முதல்வர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது என கூறப்படுகிறது.

இந்நிலையில், அமித் ஷா டெல்லி புறப்படும்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உடன் ஆலோசனை நடத்தினார். உயர்கல்வித்துறையில் மத்திய அரசுக்கும்- தமிழக அரசுக்கும் உள்ள பல முரண்பாடுகள் குறித்தும், சூரப்பா விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து இரண்டு நாள் சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு, டெல்லி செல்ல சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் புறப்பட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.