காட்டுமன்னார்கோவில் அருகே 6 மாதங்களுக்கு பிறகு வார சந்தை திறக்கப்பட்டது. இதில் விவசாய பட்டதாரி வாலிபர் கத்திரிக்காய் வியாபாரம் மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே செயல்பட்டு வரும் வார சந்தை வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் 25ந் தேதி முதல் வார சந்தை
செயல்படவில்லை. இந்த நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு சந்தை மீண்டும் தொடங்கி
உள்ளது. கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து, தற்போது மீண்டு வந்து
தனது சொந்த உற்பத்தியில் கத்தரிக்காய் வியாபாரம் செய்கிறார் மணிகண்டன்
என்கிற விவசாய பட்டதாரி.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஆறு
மாதங்களாக கொரோனோ ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
வாரசந்தை தொடங்கப்பட்டதாக அறிந்து உடனடியாக நானும் எனது வீட்டில் விளையும்
காய்கறிகளை கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்தேன். பொதுமக்கள்
வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்தமாக இருந்தது. வரும் வாரங்களில்
விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.