போர்வெல் அமைக்க ஆழ்துளை கிணறு தோண்டிய போது பழங்கால அம்மன் சிலை கண்டெடுப்பு

திருச்சி: லால்குடி அருகே போர்வெல் அமைக்க ஆழ்துளை கிணறு தோண்டிய போது பழங்கால அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமம் உள்ளது. இங்குள்ள அக்ரஹாரம் தெருவில் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இன்று புதிய போர்வெல் அமைக்கும்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

சுமார் 20 அடி ஆழத்திற்கு கையில் ஆழ்துளை கிணறு போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஆழ்துளை கிணற்றில் ஏதோ சிக்குவது போல் தொழிலாளர்கள் உணர்ந்தனர். இதையடுத்து, ஆழ்துளை கிணற்றில் இருந்ததை வெளியே எடுத்து பார்த்த போது, அரை அடி உயரம் கொண்ட பழங்கால ஐம்பொன்னாலான அம்மன் சிலை என தெரியவந்தது.


இதையறிந்த பொதுமக்கள் அனைவரும் சென்று கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலையை ஆர்வத்துடன் பார்த்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், வினோத் உட்பட போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சிலையை மீட்டு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர்.

கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை நாளை லால்குடி கருவூலத்தில் ஒப்படைக்க படவுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.