அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும்; அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

உலகம் முழுவது கொரோனா வைரஸ் நோய் தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டு இருக்கின்றன. அனைத்து நாடுகளிலும் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவது சில நாடுகளில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பள்ளிகள் செயல்படவில்லை. தமிழகத்திலும் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும். பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும். 12-ம் வகுப்பில் இறுதித் தேர்வு எழுதாத 34,482 மாணவர்களில் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 718 மாணவர்களுக்கும் இன்று மாலைக்குள் தேர்வு தேதியை முதல்வர் அறிவிப்பார். இறுதித் தேர்வு முடிந்தவுடன் 4 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.