சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் 99 ஆயிரத்து 794 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 2,113 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரசு மருத்துவமனைகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேரும் பலியாகி உள்ளனர். தனியார் மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.