தெற்கு சூடானில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

வடஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா உள்ளது. இந்நிலையில் ஜூபாவில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த சரக்கு விமானத்தில் விமானி உள்பட 18 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியையொட்டி விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருப்பினும் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள தெற்கு சூடான் அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தெற்கு சூடானில் சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.