120 ஏக்கர் பரப்பளவில் உருவாக உள்ள அயோத்தி ராமர் கோவில்; இன்று அடிக்கல் நாட்டுவிழா

120 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே மூன்றாவது பெரிய கோவிலாக அயோத்தி ராமர் கோவில் உருவாக உள்ளது. இன்று இதன் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

உலகின் மிகப்பெரிய கோவிலான கம்போடியா ஹங்கோர்வாட் கோவில் 401 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 155 ஏக்கரில் அமைந்துள்ளது. மூன்றாவதாக அயோத்தி ராமர் கோவில்.

கோவிலின் நீளம் 300 அடி, அகலம் 280 அடி, உயரம் 161 அடி. 20 வருடத்திற்கு முன்னதாக வடிவமைக்கப்பட்ட வரைபடத்தில் இருந்து உயரம் மட்டும் 20 அடி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் மொத்தம் 360 தூண்கள் அமைய இருக்கின்றன. பூமி பூஜை செய்யப்படும் இடத்தில் சேர்ப்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள புனிதத் தளங்களில் இருந்து மண் மற்றும் புனித நீர் அனுப்பப்பட்டுள்ளன.

கோவிலை கட்டி முடிக்க ரூ.300 கோடி செலவாகும் என்றும், 20 ஏக்கர் பரப்பளவில் தேவையான வசதிகளை உருவாக்க ரூ.1000 கோடி வரையில் செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கோவில் கட்டி முடிக்க 3.5 வருடங்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை இன்று நடைபெற உள்ள நிலையில், 135 சாதுக்கள் உட்பட 175 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவது மட்டுமல்லாமல் பிரதமர் விமான நிலையம், சாலை விரிவாக்கம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார்.