வங்காளதேச வெள்ள பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு

டாக்கா: வங்காளதேசத்தின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகவே இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.இதனால் அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து கொண்டு வருகின்றன.

வங்காளதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது மழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம் ஆனாலும், கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் அந்த நாடு கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

மேலும், மழை, வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மே மாதம் 17-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரையில் மழை தொடர்பான சேதங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்த கனமழையால் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினர்.