தொடர் மழையால் படகு போக்குவரத்து நிறுத்தம்... சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானல்: மழை காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால் கொடைக்கானல் சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்ட காரணத்தினால் ஏமாற்றம் அடைந்தனர்.


கொடைக்கானல் ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் இரண்டு படகு இல்லங்களும் ,கொடைக்கானல் நகராட்சி சார்பில் ஒரு படகு இல்லமும் உள்ளது.

கொடைக்கானலில் நேற்று முன்தினம் முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்னும் இரண்டு தினங்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கொடைக்கானல் ஏரியில் படகு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

இதனால் மூன்று படகு இல்லங்களும் நேற்று மூடப்பட்டது. மழை காரணமாக மூடப்பட்டதாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கொடைக்கானல் சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்ட காரணத்தினால் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

எப்பொழுதும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருக்கும் கொடைக்கானல் ஏரியும் வெறிச்சோடி காணப்பட்டது. மழை எச்சரிக்கை திரும்ப பெற்றவுடன் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று படகு இல்ல நிர்வாகிகள் தெரிவித்தனர்.