ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு வெடித்து 5 பேர் பலி

வெடிகுண்டு விபத்து... ஆப்கானிஸ்தானில் ஹெல்மண்ட் மாகாணத்தில் நடந்த வெடிகுண்டு விபத்தில் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், 'ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள ஜிரெஸ்க் நகரின் சாலையோரத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் பொதுமக்கள் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று காலை ஹெரத் - கந்தஹர் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களைப் பார்க்கும்போது இதனை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் தோஹாவில் ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. இதனையடுத்து, கடத்தப்பட்ட ராணுவ வீரர்களைத் தலிபான்கள் விடுவித்தனர். இந்த நிலையில் இந்தத் தாக்குதலைத் தலிபான்கள் நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், தலிபான்களை அவ்வப்போது அந்நாட்டு அரசு விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.