பொங்கல் பண்டிகை கால பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் துவக்கம்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும், கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட போது, பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் அடுத்து வரும் பொங்கல் பண்டிகைக்கு பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்லக்கூடிய நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கப்படுகிறது.

வரும் ஜனவரி மாதம் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மக்களின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.