கொரோனா தடுப்பூசி தேவையில்லை என்கிறார் பிரேசில் ஜனாதிபதி

தடுப்பூசி தேவை இல்லை... கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான தேவை இல்லை என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் தடுப்பூசியை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்ற போதும் இது நியாயமானதாக இல்லையென பிரேசில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் விரைவில் முடிவுக்கு வரும் நிலை காணப்படும் இந்நிலையில் தடுப்பூசிக்கான தேவை இல்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களாக அதிக நோயாளிகள் பதிவாகும் வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் தொற்று பரவல் முடிவுக்கு வருவதற்கான அறிகுறியாகவே இது இருப்பதாக பிரேசில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தடுப்பூசியை கொள்வனவு செய்வதிலும், அதனை பயன்படுத்துவதிலும் உலக நாடுகள் வெளிப்படுத்தும் கூடுதல் ஆர்வம் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பிரேசிலில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்து 13 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது.

அந்நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 49 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு அங்கு இதுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 356 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.