கேரளாவிற்கு ரூ.1¼ கோடி ஹவாலா பணம் கடத்திய அண்ணன்-தம்பி கைது

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகியவை தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. கோவையில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் வாளையாறு சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு செல்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது சோதனைச்சாவடியில் வழக்கத்தைவிட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு போதை பொருட்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கடத்தி கொண்டு செல்லப்படுவதாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவவிக்ரமத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் லிபி, போதை தடுப்பு பிரிவு போலீசார் ஜெயக்குமார், சுனில்குமார், விஜயநாத் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோவையிலிருந்து வாளையார் வழியாக பாலக் காட்டுக்கு காய்கறி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக வந்தது. சந்தேகத்தின்பேரில் லாரியை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினர். இதையடுத்து லாரியில் போலீசார் சோதனை செய்தனர். இதில் காய்கறி மூட்டைக்கு அடியில் மறைத்து வைத்து முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1¼ கோடி ஹவாலா பணம் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் லாரியில் இருந்தவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரள மாநிலம் ஆலுவாயை சேர்ந்த சலாம் (வயது40), அவரது அண்ணன் மிதயன் குஞ்சு என்பதும், கோவையில் இருந்து பணத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு அண்ணன்-தம்பி 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் லாரியும் கைப்பற்றப்பட்டது. பின்னர் 2 பேரையும் பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.