கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தடுக்க கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக, இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது அதிகளவில் உள்ளதால், தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி ஒரு மாணவரின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவிசாரணை நடைபெற்றபோது 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தாள்களைத் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது. தற்போது, சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த இயலாது என கூறியதன் அடிப்படையில் மத்திய அரசு தேர்வை ரத்து செய்ததாக தெரிவித்துள்ளது.