அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் 4 நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும். 15-ந் தேதி வரை மழையை எதிர்பார்க்கலாம்.

வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. இதனால் அடுத்து வரும் தினங்களில் நல்ல மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் சற்று மழை குறையும். இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். இந்த வார இறுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

மேலும், நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் நிலையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நாட்களில் மழை பெய்யக்கூடும் என்பதால் தீபாவளியை மழையோடு கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.