நவம்பர் 30ந்தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 30ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் தமிழகத்தில் டிசம்பர் 1ந்தேதி ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை நகர் மற்றும் புறநகரில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மேட்டுப்பட்டியில் 9 செ.மீ., அவிநாசியில் 8 செ.மீ., வாடிப்பட்டி, சோழவந்தானில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.