சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்படவுள்ளன.

அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நடப்பாண்டு 2 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு கூடுதலாக டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு உள்ளிட்ட மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது.


மேலும் சுகாதாரத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி பணியாளர்கள் டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 16,005 கொசு ஒழிப்பு புகை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 4,631 பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தற்போது ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தான் அதிக காய்ச்சலால் ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்ததில் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது