ஊரடங்கை மதிக்கத்தொடங்கிய மக்கள்...முதல் நாளில் வெற்றியை பதிவு செய்த முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

சென்னையில் போலீசார் சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து, ஏதாவது ஒரு பிரதான சாலையை வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்து, பிரதான சாலைகளில் டிரோன் கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். சென்னை நகருக்குள் 288 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 112 இடங்களிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். 18 ஆயிரம் போலீசார் ஷிப்டு முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்பவர்களை தவிர, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வாகனங்களில் செல்வதற்காக சிறப்பு ‘இ பாஸ்’ வைத்திருக்க வேண்டும். அந்த ‘பாஸ்’ இருந்தவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும். அத்தகைய பாஸ் இல்லாதவர்களும் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் சென்னையின் மூலை, முடுக்குகளில் நின்றுகொண்டு தேவை இல்லாமல் சாலையில் வரும் வாகனங்களை போலீசார் மடக்கிப் பிடித்து அபராதத்தொகை விதித்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

ஊரடங்கை பொறுத்தவரையில் பொதுமக்கள் சற்று விழிப்புணர்வு அடைந்திருக்கிறார்கள். சாலைகளில் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காகவும், மத்திய மாநில அரசு ஊழியர்கள், இயங்கி வரும் தனியார் கம்பெனி ஊழியர்களின் பணியாளர்கள் மட்டுமே வெளியே வந்தார்கள்.

முழு ஊரடங்கு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த கடைகள் பிற்பகல் 2 மணியோடு பெரும்பாலான இடங்களில் மூடப்பட்டுவிட்டன. இதனால் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்களை காணமுடியவில்லை. சாலைகள் அனைத்தும் பாலைவனம் போல வெறிச்சோடியது.

கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், பொதுமக்களிடையேயும் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள கடந்த சில ஊரடங்குகளை முழுமையாக பின்பற்றாத பலரும், தற்போது நோய் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்று பயந்து ஊரடங்கை மதிக்கத்தொடங்கியிருக்கிறார்கள். முழுமையாக பின்பற்றவும் தொடங்கி இருக்கிறார்கள். அந்தவகையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு முதல் நாளில் வெற்றியை பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.