பி.எச்.எச் கார்டுதாரர்களுக்கு இன்று முதல் கொண்டைக்கடலை இலவசம்

தமிழக அரசின் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் கொரோனா காலக்கட்டத்தில் ஒரு மாதம் மட்டும் ரூ.1,000 வழங்கப்பட்டது. தொடர்ந்து 3 மாதங்கள் அரிசி, துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவை இலவசமாக தமிழக அரசால் வழங்கப்பட்டது. அதேபோல கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி மத்திய அரசின் திட்டத்தின் கீழும் இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த மாதத்துடன் அத்திட்டம் நிறைவு பெற்றது.

அதையடுத்து கொரோனா காலத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ கொண்டைக்கடலையை இலவசமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

அதாவது மத்திய அரசின் திட்டத்தில் அந்தியோதயா அன்னயோஜனா (ஏ.ஏ.ஒய்) மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்போர் ரேஷன் கார்டு (பி.எச்.எச்.) கார்டுகளுக்கு மட்டும் தலா 1 கிலோ வீதம் 5 மாதங்களை கணக்கீட்டு மொத்தமாக இந்த மாதம் 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்படுகிறது. வறுமைகோட்டுக்கு மேல் உள்ள ரேஷன் கார்டு தாரர்கள் என வரையறுக்கப்பட்ட எம்.பி.எச். கார்டுதாரர்களுக்கு கொண்டைக்கடலை வழங்கும் திட்டம் இல்லை. அவர்களுக்கு துவரம்பருப்பு மட்டும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மேற்குறிப்பிட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் தலா 5 கிலோ கொண்டைக்கடலை இன்று முதல் வருகிற 6-ந் தேதிவரை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக கொண்டைக்கடலை பாக்கெட்டுகள் நேற்றே அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வந்து இறங்கியுள்ளது