புதிய கொரோனா வைரஸ் தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசனை

இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் லண்டன் மாநகரிலும் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இது கொரோனா வைரசின் புதிய வடிவமாக வெளிப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது ஏற்கனவே பரவி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன. மத்திய அரசும் இங்கிலாந்துக்கான விமான சேவைக்கு தடை விதித்துள்ளது.

மேலும், லண்டனிலிருந்து கடந்த பத்து நாட்களுக்குள் சென்னை வந்துள்ள பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசிக்கிறார். தற்போதுள்ள கொரோனா ஊரடங்கு டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.