தமிழக முதலமைச்சர் வரும் 14 ம் தேதி நாகர்கோவில் வருகை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 14 ம் தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாகவும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்ய மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது வருகிற 13-ந்தேதி முதல் 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 13ஆம் தேதி முதலாவதாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்ல உள்ள முதலமைச்சர், 14ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 14 ம் தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு பணி உள்பட பல்வேறு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆய்வு கூட்டத்தின் போது பல்வேறு வளர்ச்சி பணிகளையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியை ஒட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் புனரமைக்கப்பட்டு வருவதோடு கூட்டம் நடைபெறும் அரங்கத்தில் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் போன்றவற்றுடன் சோதனையிடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.