டிசம்பர் 4-ந்தேதி முதலமைச்சர் சிவகங்கை மாவட்டம் வருகை

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 4-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டங்கள் தோறும் அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில், டிசம்பர் 4-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

சென்னையில் இருந்து 4-ந்தேதி மதுரைக்கு செல்லும் முதலமைச்சர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில், மதுரை மாநகர் மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைத்திடும் வகையில் முல்லைப்பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.