வயலில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு... மருத்துவமனையில் ஒப்படைப்பு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வேலுப்பட்டி கிராமத்தில் வயலில் கிடந்த பிறந்து சில மணிநேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டு தஞ்சை ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ளது வேலுப்பட்டி. இங்குள்ள ஒரு வயலில் நேற்று காலை குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால் வயல் வேலைக்கு சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து சத்தம் கேட்டு பகுதிக்கு சென்று பார்த்தனவர். அங்கு ஒரு வயலில் துணி கூட சுற்றப்படாத நிலையில் பிறந்து சில மணிநேரமே ஆன நிலையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது.

உடன் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அருகில் இருந்தவர்கள் குழந்தையை வயலில் இருந்து மீட்டு பக்கத்தில் உள்ள வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். மேலும் இது குறித்து பூதலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் வேலுப்பட்டிக்கு சென்றனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்சும் வேலுப்பட்டிக்கு வந்தன டெக்னீசியன் கவுசல்யா, டிரைவர் முருகேசன் ஆகியோர் போலீசார் உதவியுடன் அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் குழந்தையை தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தை தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தை நல்ல நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பூதலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.