உய்குர் முஸ்லிம்கள் விவகாரத்தில் கனடா போலி தகவல்கள் கூறுவதாக சீனா குற்றச்சாட்டு

கனடா மீது சீனா குற்றச்சாட்டு... உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக போலியான தகவல்களை கனடா கூறுவதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனடா நாடாளுமன்றம் சீனாவின் ஸ்திரத்தன்மையை புறக்கணிக்கிறது. உய்குர் முஸ்லிம்கள் குறித்தும் சிறுபான்மையினர் குறித்து தவறான தகவல்களை கனடா நாடாளுமன்றம் பரப்புகிறது.

சீனாவின் உள்விவகாரங்களில் கனடா தலையிடுகிறது. இது கனடாவின் அறியாமையை பிரதிப்பலிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீனாவில் ஸின்ஜியாங் மாகாணத்தில்தான் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் உய்குர் முஸ்லிம்கள், உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர்.

சீனாவின் மற்ற மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள், சிறுபான்மைப் பிரிவினர் இடையே குழந்தைப் பேற்றைத் தடுக்க அத்துமீறும் செயல்களில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அசோசியேட் பிரஸ் (ஏ.பி.) செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் தெரியவந்தது. மேலும் அங்குள்ள மசூதிகளை சீனா இடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக உலக நாடுகளிடையே எதிர் மறையான விமர்சனத்தை சீனா பெற்றது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.