கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய உண்மை தகவல்களை மறைக்கும் சீனா!

உலகம் முழுவதையும் நடுங்க வைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் உள்ள வுகான் நகரில் தான் தோன்றியது. இதற்கு முடிவு எப்போது? என்று தெரியாத நிலையில், கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் போராடிக்கொண்டு இருக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, வுகானில் உள்ள ஆய்வுக்கூடத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாகவும், கொரோனா பாதிப்பு பற்றிய சரியான தகவல்களை சீனா மறைப்பதாகவும் சீனா மீது அமெரிக்கா தொடந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனை உண்மையாக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி சீனாவில் கொரோனாவால் 84 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 4,673 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில், சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தேசிய ராணுவ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவர தகவல்கள் ரகசியமான கசிந்து உள்ளன.

அந்த தகவல்களை நிபுணர்கள் ஆய்வு செய்ததன் மூலம், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரமாக இருக்கலாம் என்று தெரியவந்து உள்ளது. 84 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சீன அரசு கூறி இருக்கும் நிலையில், அந்த நாட்டு ராணுவம் நடத்தும் பல்கலைக் கழகத்தின் தகவல்கள் மூலம், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரம் என்று தெரியவந்து இருப்பதால், கொரோனா பாதிப்பு பற்றிய உண்மைகளை சீனா மறைப்பதாக கருதப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் இருந்து கசிந்த தகவல்களை நிபுணர்கள் ஆய்வு செய்தபோது கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சீனா முழுவதும் உள்ள 230 நகரங்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஆஸ்பத்திரிகள், குடியிருப்பு வளாகங்கள், ஓட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், உணவு விடுதிகள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டு இருக்கிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் பெயர் விவரங்கள் இல்லாமல் வெறும் எண்ணிக்கை மட்டுமே இருப்பதால், ஒரு நபரே பலமுறை பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த புதிய தகவல் பற்றி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.