மால்டா தீவில் கடல் மீன்களுக்கு உணவளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா

கிறிஸ்துமஸ் தாத்தாவான சாண்டா கிளாஸ் நீரில் மூழ்கி கடல் மீன்களுக்கு உணவளிக்கும் காணோளி காட்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் நாள் நெருங்க நெருங்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு உலக நாடுகள் தயாராகி வருகின்றன. ஐரோப்பாவில் உள்ள மால்டா (Malta) ஒரு குட்டி தீவு நாடு. உலகத்திலேயே 10 வது குட்டி நாடான இந்த மால்டா, நீர் விளையாட்டுக்கள் நிறைந்த ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலம்.

இந்த நாட்டின் மக்கள் தொகையை விட மூன்று பங்கு அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருடந்தோறும் இந்த நாட்டுக்கு வருகின்றனர்.

இந்த நாட்டில் உள்ள க்வாரா (Qawra) என்ற நகரில் அமைந்துள்ள தேசிய மீன் காட்சியகத்தில் கடல் போல் ஒரு பெரிய மீன் தொட்டி அமைத்துள்ளார்கள். கடலில் இருப்பதைப்போலவே கடல் தாவரங்கள் வைத்து பெரிய பெரிய கடல் மீன்களோடு அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது அந்த நீர்த்தொட்டி.

கிறிஸ்துமஸ் நெருங்குவதை முன்னிட்டு, ஒரு வித்தியாசமான சுவாரஸியமான நிகழ்வு அங்கே நடந்தேறியுள்ளது. கிறிஸ்துமஸ் தாத்தா சாண்டா கிளாஸ் நீர் மூழ்கி சாதனங்களை அணிந்துக் கொண்டு, பரிசுகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையுடன் அந்த நீர்த்தொட்டியில் இறங்குகிறார்.

இறங்கிய அவர், அங்கே சுற்றி வரும் பல வண்ண கடல் மீன்களுக்கு உணவளிக்க ஆரம்பிக்கிறார்.அவர் உணவளிக்க ஆரம்பித்தவுடன் அங்குள்ள மீன்கள் அவரிடம் பாய்ந்து வருகின்றன.

ஒரு பெரிய சுறா மீனும் அங்கு வருகிறது. கொஞ்சமும் பயமில்லாமல் அதற்கும் உணவளித்து அந்த சுறா மீனை தட்டி விளையாடுகிறார். பின்பு அங்கே உள்ள பெரிய பெரிய கடல் மீன்கள், உணவுக்காக அவரை சுற்றி சுற்றி வருகின்றன.

கிறிஸ்துமஸ் நெருங்குவதை ஒட்டி வெளியாகியுள்ள இந்த காணோளி சமூக வளைத் தளங்களில் வைரலாகி பரவி பார்ப்பவர்களை பரவசப்படுத்துவதாக அமைந்துள்ளது.