சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள தலைமைச் செயலகம் மூடல்

தமிழகத்தில் கொரோனா கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் இன்று அலுவலகங்களையும் சுத்தப்படுத்துவதற்காக தலைமைச் செயலகம் மூடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் காலகட்டத்தில் பணியிட வளாகம் மற்றும் பொதுப்பகுதிகளை தொற்றில்லாமல் வைத்துக் கொள்ளவும், சுத்தப்படுத்துவதை உறுதி செய்யவும் மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பிறப்பித்த அரசாணையில், ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழு அளவில் மேற்கொள்வதற்காக இரண்டாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு, சுத்திகரிப்பு பணிகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பொதுத்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அனைத்து அலுவலகங்களையும் சுத்தப்படுத்துவதற்காக 12-ம் தேதி (இன்று) முழுவதும் தலைமைச் செயலகம் மூடப்பட்டு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.