தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்...முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனாவின் அவசர சிகிச்சைக்கு 2,000 ஆயிரம் மினி மருத்துவமனைகள் உருவாக்கப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுததுதல், தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் சுகாதாரத் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5 மாதங்களில் தமிழக உயர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக நோய்ப்பரவல் கட்டுக்குள் உள்ளது. ஒரு நாளுக்கு சுமார் 85 ஆயிரம் பரிசோதனைகள் வரை மேற்கொண்டதால் வைரஸ் பரவல் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அதிக அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையால் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தி, ஆயிரக் கணக்கானோர் பரிசோதிக்கப்பட்டு, அறிகுறி தென்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்ததால் நோய்ப்பரவல் படிப்பாடியாக குறையத் தொடங்கியுள்ளது.

தற்போது கொரோனா குறித்த சந்தேகம் இருப்பதால் பொதுமக்களுக்கு வழக்கமாக ஏற்படும் சாதாரண காய்ச்சல் மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது எனவும் முதல்வர் தெரிவித்தார்.