சாத்தான்குளம் விவகாரம்: ஜெயராஜ் மகளுக்கு அரசு பணி வழங்கப்பட்டது

போலீஸ் காவலில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜின் மூத்த மகளும், பென்னிக்சின் சகோதரியுமான பெர்சிக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் விசாரணையின்போது லாக்அப்பில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த இரட்டைக்கொலை தொடர்பாக தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது ஜெயராஜின் மூத்த மகளும், பென்னிக்சின் சகோதரியுமான பெர்சிக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணையை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சோதனையில் இருந்து மீள்வதற்காக அரசு தனக்கு பணி வழங்கியிருப்பதாக கூறினார். தன் தந்தை, சகோதரர் மரணத்தில் நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கொலை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.