தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கத்திற்கு வாய்ப்பு இல்லை - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கத்திற்கு வாய்ப்பு இல்லை என தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டிடம், கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதை அடுத்து அந்த மருத்துவமனையை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:- கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்றாக மாறவில்லை. ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பொதுமக்கள் வெளியே செல்லும்போது முககவசம், தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் மீண்டும் பொது முடகத்திற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்த முதல்வர் பழனிசாமி காற்றின் மூலம் கொரோனா பரவும் என்பது உறுதி செய்யவில்லை என்றும் கூறினார். மேலும் சென்னையில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவலையும் தடுக்க வேண்டும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக முதல்வர் மீண்டும் தமிழகத்தில் பொது முடக்கம் இருக்க வாய்ப்பில்லை என கூறியதை அடுத்து ஜூலை 31-ஆம் தேதியுடன் பொது முடக்கம் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.