மலை உச்சியிலிருந்து பாறைகள் மீது விழுந்த நாயை மீட்ட கடலோர காவல்படையினர்

ஆரிகான்: அமெரிக்காவின் ஆரிகான் மாநிலத்தில் மலை உச்சியிலிருந்து தவறி பாறைகள் மீது விழுந்த நாயை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து காவல் படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சுற்றுலா பயணி ஒருவர் மலை உச்சியில் தனது ஜெர்மன் ஷெப்பர்டு நாயுடன் விளையாடியபோது அது கால் இடறி, 300 அடி ஆழத்தில் கடலை ஒட்டியுள்ள பாறைகள் மீது விழுந்தது.

காயமடைந்த நாய், கால்நடையாக சென்றடைய முடியாத பாறைகள் நிறைந்த பகுதியில் பரிதவித்தபடி நின்றது.

தகவலறிந்து வந்த கடலோர காவல்படையினர், ஹெலிகாப்டரிலிருந்து ஸ்டிரெட்சருடன் இறங்கி நாயை மீட்டனர். மிகுந்த சிரமத்திற்கு இடையில் நாய் மீட்கப்பட்டது. இதையடுத்து கடலோர காவல்படையினருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.