மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து; கல்லூரி மாணவர் பலி

பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியாகி உள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்லம்பள்ளி பகுதியில் உள்ள மாணிக்கம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் முருகன் (வயது 19). இவர் பாலக்கோடு அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அருண் (15). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இவர்கள் 2 பேரும் தர்மபுரிக்கு சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் மேம்பாலம் அருகே வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறுவன் அருண் பலத்த காயம் அடைந்தான். அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று இறந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.