அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஆசிரியராக மாறிய நடிகர் சூரி!

தமிழ் பட உலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். பந்தயம் வைத்து பரோட்டா சாப்பிட்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் சிரிக்க வைத்தார்.

அதைத்தொடர்ந்து விஜய், அஜித்குமார், சூர்யா போன்ற பிரபல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து, முன்னணி நகைச்சுவை நடிகர் ஆனார். நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கியது, சூரியின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து, சொந்த ஊரான மதுரையில் ஓட்டல்களை தொடங்கினார். அந்த ஓட்டல்கள் தற்போது லாபகரமாகவே அமைந்தன. ஓட்டல்கள் மூலம் கிடைத்த லாபத்தை அவருக்கு தெரிந்த பிற தொழில்களில் முதலீடு செய்தார். ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார்.

இப்போது அவர், அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியிருக்கிறார். கல்வியின் முக்கியத்துவம், விடா முயற்சி, தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் ஆகியவற்றை பள்ளி குழந்தைகளுடன், (ஆன்லைன் மூலம்) பகிர்ந்து வருகிறார்.